Monday, May 6, 2024

கண்ணாடி



'அப்பா....!!!!'   உள்ளேயிருந்து மருமகள் இரைவது கேட்டது....


தொடர்ந்த முணுமுணுப்புக்களைக் கேட்குமளவிற்குச் செவியிலும் துல்லியமில்லை,  மனத்திலும் கவனமில்லை.   காலம் தன் போக்கில் கொடுத்த புலனறிவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டிருந்தது.   இன்னும் எங்கெங்கோ சிந்தனை செல்லும் முன், 

' இங்கதான் இருக்கேன்னு ஒரு சத்தம் கொடுத்தா என்ன?  நான் உங்களத் தேடிகிட்டிருக்கேன்ல.....'    

மருமகள் கண்ணெதிரில்.   பேசுவதற்கு சந்தர்ப்பமே இல்லை.   

'பெரியவன் பள்ளிக்கூடத்துக்கு தயாராயிட்டான்,  அவனை விட்டுட்டு வாங்க...'

அந்தப் பெரியவனுக்கு வயசு ஏழு.    அவனுக்கும் பெயர் சுந்தரம்.   மாமனார் பெயரைச் சொல்லக்கூடாது என்பதால்  பெரியவன் பட்டம் !   ஒவ்வொரு முறை மருமகள் 'பெரியவன்' என்று சொல்லும் போதும் மனம் சலித்துக் கொள்ளும்.   மாமனாரிடம் வேலை சொல்லும் பொழுதும்,  இரைந்து பேசும் போதும் இந்த மரியாதை இல்லை.   எல்லாம் ஒருவித வேஷம்.    

தினசரியான சிந்தனைகள்.   என்றுதான் மனம் இவற்றிலிருந்து விடுதலை அடையுமோ....!!!  

எண்ணங்கள் பலவாறாக ஓடிக் கொண்டிருக்க,  உடல் அனிச்சையாக வெளியே செல்லத் தயாராகி விட்டது. 

'தாத்தா !!  நான் சூப்பரா இருக்கனா....?'   

சுந்தரம் உண்மையிலேயே சுந்தரம்தான்.  பிள்ளைப்பருவந்தான் எத்தனை இனிமையானது !  கண்கள் ஒளியோடு,  முகம் மலர்ச்சியோடு;   மனிதர்கள் தங்கள் பிள்ளை மனத்தைத் தொலைக்காமலிருந்தால்., 

'என்ன தாத்தா இந்தப் புது 'டை' நல்லாயிருக்கா ?'   சுந்தரம் அருகில் வந்து பதில் தேடும் பார்வை பார்த்தான்.    

கால்கள் பல வருடப் பழக்கத்தில் 'தானியங்கி'களாக செல்லத் துவங்கின.  வழியில் சுந்தரம் பல கேள்விகள் கேட்டான்;  அவனுக்குத் தகுந்தாற்போல் பதில் சொல்வது ஒரு ஆனந்தம். பல நேரங்களில் சற்றுக் கடினம் கூட....   

பேரனை பள்ளிக்கூடத்தில் விட்டாயிற்று.   இனி மாலை வரை பொழுதைப் போக்க வேண்டும்.   இன்றைக்காவது, சீட்டாடப் போக முடியுமா ?   ஒரு வாரமாக மருமகள் தையல் கற்றுக் கொள்ளப் போனதால் வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று.   இன்று முதல் காலையிலேயே தையல் வகுப்பிற்குப் போகிறாள்.  மதியம் தான் 'சின்னத்திரை' விறுவிறுப்பாக இருக்கிறது போலும் !!

'அப்பாடா' தன்னையுமறியாமல் கோயில் திண்ணையைக் கண்டதும் வாய் சொல்லியது.   இன்னும் திண்ணை நிரம்பவில்லை.   பக்கத்துக் கடையிலிருந்து நாளிதழை எடுத்துக் கை புரட்டிற்று.   நிதி நிலை அறிக்கை தான் தலைப்புச் செய்தி. மனம் ஒட்டவில்லை.     

வீட்டு நிதிநிலை அறிக்கையின் துண்டை சரி செய்ய நாளிதழ் நிறுத்தப்பட்டது.    வேறு செலவுகள் இல்லையா என்ன... , பிள்ளைக்கு புத்தியில்லை என்றால் என்ன செய்ய முடியும் ?   என்னதான் முயற்சி செய்தும் அவனது 'ஆகாறு' அளவினதாகவே இருந்து விட்டது.   'போகாறு' அகலாமல் இருக்க மருமகள் கணக்குப் பார்த்து செலவு செய்தாள்.    நிறுத்தப்பட்டவை என்னமோ மாமனாரின் வசதிகள்தான்.    

மெதுவாகத் திண்ணை நிரம்பியது.  நரைமுடிகள் பழம்பெருமை பேசின.   சில தன் வாரிசுகளின் பெருமையில் சிலாகித்தன.   பல தன் இயலாமையின் கஷ்டத்தைப் புலம்பின.    

'உம்மருக்கென்னவேய்...   சுந்தரம்பிள்ளை !!   உம் மருமக உம்ம மக மாதிரில்லாப் பாத்துகிடுதா....'   பக்கத்திலிருந்து பார்த்தது போல் ஒரு நரைமுடி சொல்லியது.    விட்டுக் கொடுக்க முடியவில்லை.....   

இருக்கும் போதே சட்டென்று உரைத்தது.   மருமகள் தையல் வகுப்பு போக வேண்டும்.   வேகமாக திண்ணையிலிருந்து இறங்க,  சட்டென்று டீக்கடைப் பையன் மோதிவிட்டான்.   கொஞ்சம் சுதாரிப்பதற்குள் கையிலிருந்த கண்ணாடி கீழே விழுந்நு விட்டது.   கூட்டம் கூடியது.   சிறு பரபரப்பு.   

'உட்காருங்க...'
'இந்தாங்க, கொஞ்சம் தண்ணி குடிங்க...'
'இருந்துட்டுப் போங்க...'

சற்று நேரத்தில் படபடப்பு அடங்கியது.   சிந்தனை தொடங்கியது.   மருமகளிடம் ஏன்ன சொல்ல...   எப்படி சொல்ல......  உள்ளம் பலவாறு யோசித்தது.  வழியில் வேறு எதுவும் ஞாபகமில்லை.   வீட்டிற்குள் நுழையவும்,  

'மாமா வழக்கம் போல கோயில் திண்ணைல உக்காந்துட்டாங்களோ என்னமோ !  ஆளைக் காணோம்.    உங்க அப்பாக்கு  ரொம்ப மறதி .... '    வழக்கத்திற்கு மாறாக பிள்ளை வீட்டில் இன்னும் இருந்தான்.   

மருமகளின் பேச்சு மீண்டும் பழையவற்றை நினைவுபடுத்தியது.....

'மனுஷனுக்கு என்ன ஞாபக சக்தி.... என்ன கேட்டாலும்,  கோப்பு எங்கன்னு தேடாம,  டக்குன்னு சொல்லுவாரு.....  '    


வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்கள்.   எழுபது வருட அனுபவங்கள்.....   கடந்து செல்லக் கற்றுத் தந்திருந்தது....   பலவிதமான பயணங்கள்.    சொந்த அனுபவம் போதாதென்று,  பிறரது அனுபவங்கள் வேறு.... 'சுந்தரம் கிட்ட கேட்டா ஒரு வழி கிடைக்கும்....  '      எல்லாம் பார்த்தாயிற்று....    

'மாமா வந்துட்டீங்களா...   எங்க மறந்து போய் கோயில் திண்ணைலயே உட்காந்துட்டீங்களோன்னு நினைச்சேன்....   சரி நான் தையல் வகுப்புக்கு.... அட என்ன மாமா,   கண்ணாடி என்னாச்சு ?

அவள் பார்வை கண்ணாடியில் விழாது,  குறைஞ்சது சாயங்காலம் வரைக்காவது.... என்ற நம்பிக்கை நிறைவேறவில்லை.....   

'உடைச்சுட்டீங்களா....   அத சரி பண்ண செலவு....   ம்....   '

மனம் வேறு திசை தேடியது... 

மருமகள் அவளுக்குள்ளே பேசிக்கொண்டாள். 

முழுவதுமாக எதுவும் சொல்ல முடியாமல்.....  உலகம் இன்னும் வெறுமையாகத் தோன்றியது... 

முதலில் மருமகள் அன்போடும்,  மரியாதையோடும்தான்  இருந்தாள்.   எல்லாம் பணி ஓய்வுக்குப் பின்னால்தான்.....வந்த பணத்தில் பாதியை பிள்ளைக்குத் தந்துவிட்டு மீதியில்  நாடு முழுக்க சுற்றியாகி விட்டது.
தேக்கி வைத்திருந்த ஆசை.   அதன் பின்னும் மூன்று வருடம் பிள்ளையுடன் சேர்ந்து இருக்கவில்லை. 

'சின்னவங்க அவங்களும் சந்தோஷமா இருக்கலாம், அவங்களுக்குப் பொறுப்பும் வரும்.'   

அவள் சொல்லிவிட்டாள்.   அவளை மறுத்துப் பேச மனம் வந்ததேயில்லை.   அவள் போனபின்தான் பிள்ளையோடு சேர்ந்து வாழ வேண்டியதாயிற்று. 

வருமானம் ஏதும் இல்லாமல் இருந்தால் பெற்றோரும் கூட சுமைதானே....  

எத்தனை முறை மனம் இவ்வாறு யோசிக்கிறது.   எண்ணிக்கையே இல்லை.  இருந்தாலும் யோசிப்பதும் மாறவில்லை.   

'சரி நான் அப்ப வேலைக்குக் கிளம்பறேன்...'  

மகனின் குரல் சிந்தனையைக் கலைத்தது.   

'இன்னிக்கு சாயந்திரம் கடைக்குப் போவோம், உனக்குப் புடவை வாங்க....' 

'கொஞ்சம் இருங்க... ' 

மருமகள் கிசுகிசுத்தாள்.... 'மாமா அவங்க கண்ணாடிய உடைச்சிட்டாங்க;  இன்னிக்கு சாயந்தரம்  மாமாவக் கூட்டிகிட்டுப் போயி புதுக் கண்ணாடி வாங்கிக் கொடுங்க..... '

'நீ ரொம்ப நாளாக் கேட்டுகிட்டு இருக்கியே... இப்பதான் கையில கொஞ்சம் காசு இருக்கு.... அப்புறம் எப்ப வாய்க்குமோ தெரியாது.....  ' 

'அதெல்லாம், நான் தைச்சு சம்பாதிக்கற காசுல வாங்கிக்கலாம்...  மாமாக்கு கண்ணாடி இல்லாம சீட்டாட முடியாது.... அவருக்குன்னு இருக்கற ஒரே பொழுது போக்கு அதான்.....' 

'நீ இப்பதான் தையல் கத்துக்கவே போற...  அதுல நீ எப்ப சம்பாதிக்க....  சரி...  நீ சொன்னதத்தான் நான் கேட்கணும்.....'

மகன் புறப்பட்டுப் போனான்.   சற்று நேரத்தில் மருமகளும் புறப்பட்டாள்.   

'மாமா, சீக்கிரம் வந்திருவேன்...   இல்லன்னாலும்,  எனக்காகக் காத்திருக்காம சாப்பிடுங்க...   அப்படியே மறக்காம பால் வாங்கி வைங்க.  உங்களுக்கு மறதி அதிகமாய்ட்டு...   வாரேன்..... '   

மருமகள் சத்தமாய்ச் சொல்லிவிட்டுப் போனாள்.   

தன்னிச்சையாய்  மூக்குக்கண்ணாடியைக் கை முகத்தில் மாட்டியது.   

எதிரில் முகம் பார்க்கும் கண்ணாடி.   முகத்தில் எப்போதும் போல் தெரியும் சுருக்கங்கள்.   

ஆனால் கவனம் முகத்திலிருந்த கண்ணாடியில் விழுந்தது.  அது உடைந்திருந்தது.




No comments: