Search This Blog

Friday, July 16, 2010

வித்யா-சி

மனைவி யல்லள்
மனையின் தலைவியவள்
மனையின் இதயமவள்

நலம்தரும் விதியாய் – இளமை
வளமையின் விதையாய் 

சதியெனும் உறவாய் – அன்புச்
சுவைமிகு கனியாய்

மெல்லிய மனமாய் – சாதி
மல்லியின் மணமாய்  

இதயத்தின் துடிப்பாய் – வாழ்க்கைப்
பயணத்தின் துணையாய்

விலையில்லாக் கலையாய் – இல்லத் 
தலைவியெனும் தகையாய்

திருவினைப் பயனாய் – நிறை
திருமதியென வந்தாள்

துன்பம் இல்லை எந்நாளும்
இன்பநிறை இல்லே எந்நாளும் 

வெறும் மணத்தினால் 
வந்தவளில்லை
விரும்பும் மனத்தினால் 
வந்தவள்


கண்ணென்று உனக்கு
நானில்லை
கருத்தாக எனக்கு
நீ உண்டு

உன்னை வாழ்த்தினால்- அது
எனக்கும் வாழ்த்து
தன்னைத்தான் வாழ்த்துவார் யார்

வணக்கம் அந்த
இறைவனுக்கு -உன்னை
வரமாய்த் தந்த
தலைவனுக்கு

என்னோடு  நீ இரு
காம்போடு இலையாக
கடலோடு அலையாக

பிள்ளைத் தமிழ்

உயிர் தந்தாய் , உடல் தந்தாய் !

உள்ளம் தந்தாய், உயர்பண்பு தந்தாய் !

உன்னத நெறிகள் தந்தாய் !

உவமையில்லாப் பாசம் தந்தாய் !

வரம்பில்லா உரிமை தந்தாய் !

விரும்பியதெல்லாம் தந்தாய் !

எங்கள் தாய், தந்தாய்

இவ்வுலகில்

நீங்கள் மட்டும் பெற்றோரில்லை !!

நாங்களும் தான் பெற்றோர்....

உங்கள் பிள்ளைகளாகும்

பெரும்பேறு பெற்றோர் !!



எத்தனை முறை பிறந்தால் என்ன ?

எத்தனை முறை இறந்தால் என்ன ?

எத்தனை முறை வாழ்க்கைச்சுழலில்

உருண்டுவலம் வந்தாலென்ன ?

அத்தனை முறைகளும் வேண்டும்

அதற்கு மேலும் வேண்டும்

இத்தனை முறைதான் என்று

எண்ணிக்கை ஏதுமின்றி

மீண்டும் மீண்டும் நாங்கள்

உங்கள் மகன்களாகப்

பிறக்க வேண்டும்!!

இறப்பில்லா வாழ்வில் இல்லை!

உங்கள் மகவாகும்

பிறப்பிலன்றோ உள்ளது அமரம் !!



பொன் வேண்டாம் !

பொருள் வேண்டாம் !!

புகழ் வேண்டாம் !

பொய்மை யில்லாப்

பெருங்குணத்தோன் திருவடி

நாட வேண்டாம் !!

நிம்மதி நாங்கள் பெற

உங்கள் மடி போதும் !

நினைக்கும் நேரமெல்லாம்

நெஞ்சம் மகிழ்வுற

உங்கள் பிள்ளை என்ற

பெருமை போதும் !!