Friday, July 16, 2010

பிள்ளைத் தமிழ்

உயிர் தந்தாய் , உடல் தந்தாய் !

உள்ளம் தந்தாய், உயர்பண்பு தந்தாய் !

உன்னத நெறிகள் தந்தாய் !

உவமையில்லாப் பாசம் தந்தாய் !

வரம்பில்லா உரிமை தந்தாய் !

விரும்பியதெல்லாம் தந்தாய் !

எங்கள் தாய், தந்தாய்

இவ்வுலகில்

நீங்கள் மட்டும் பெற்றோரில்லை !!

நாங்களும் தான் பெற்றோர்....

உங்கள் பிள்ளைகளாகும்

பெரும்பேறு பெற்றோர் !!



எத்தனை முறை பிறந்தால் என்ன ?

எத்தனை முறை இறந்தால் என்ன ?

எத்தனை முறை வாழ்க்கைச்சுழலில்

உருண்டுவலம் வந்தாலென்ன ?

அத்தனை முறைகளும் வேண்டும்

அதற்கு மேலும் வேண்டும்

இத்தனை முறைதான் என்று

எண்ணிக்கை ஏதுமின்றி

மீண்டும் மீண்டும் நாங்கள்

உங்கள் மகன்களாகப்

பிறக்க வேண்டும்!!

இறப்பில்லா வாழ்வில் இல்லை!

உங்கள் மகவாகும்

பிறப்பிலன்றோ உள்ளது அமரம் !!



பொன் வேண்டாம் !

பொருள் வேண்டாம் !!

புகழ் வேண்டாம் !

பொய்மை யில்லாப்

பெருங்குணத்தோன் திருவடி

நாட வேண்டாம் !!

நிம்மதி நாங்கள் பெற

உங்கள் மடி போதும் !

நினைக்கும் நேரமெல்லாம்

நெஞ்சம் மகிழ்வுற

உங்கள் பிள்ளை என்ற

பெருமை போதும் !!

No comments: