உயிர் தந்தாய் , உடல் தந்தாய் !
உள்ளம் தந்தாய், உயர்பண்பு தந்தாய் !
உன்னத நெறிகள் தந்தாய் !
உவமையில்லாப் பாசம் தந்தாய் !
வரம்பில்லா உரிமை தந்தாய் !
விரும்பியதெல்லாம் தந்தாய் !
எங்கள் தாய், தந்தாய்
இவ்வுலகில்
நீங்கள் மட்டும் பெற்றோரில்லை !!
நாங்களும் தான் பெற்றோர்....
உங்கள் பிள்ளைகளாகும்
பெரும்பேறு பெற்றோர் !!
எத்தனை முறை பிறந்தால் என்ன ?
எத்தனை முறை இறந்தால் என்ன ?
எத்தனை முறை வாழ்க்கைச்சுழலில்
உருண்டுவலம் வந்தாலென்ன ?
அத்தனை முறைகளும் வேண்டும்
அதற்கு மேலும் வேண்டும்
இத்தனை முறைதான் என்று
எண்ணிக்கை ஏதுமின்றி
மீண்டும் மீண்டும் நாங்கள்
உங்கள் மகன்களாகப்
பிறக்க வேண்டும்!!
இறப்பில்லா வாழ்வில் இல்லை!
உங்கள் மகவாகும்
பிறப்பிலன்றோ உள்ளது அமரம் !!
பொன் வேண்டாம் !
பொருள் வேண்டாம் !!
புகழ் வேண்டாம் !
பொய்மை யில்லாப்
பெருங்குணத்தோன் திருவடி
நாட வேண்டாம் !!
நிம்மதி நாங்கள் பெற
உங்கள் மடி போதும் !
நினைக்கும் நேரமெல்லாம்
நெஞ்சம் மகிழ்வுற
உங்கள் பிள்ளை என்ற
பெருமை போதும் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment